
நான்
ஆனந்த்-கெல்ஃபாண்ட் உலக செஸ் சேம்பியன்ஷிப்பில் சில ஆட்டங்கள் குறித்து
இட்லிவடையில் ஒரு வாரத்திற்கு முன்னர் எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.
இப்போது, ஆனந்த் உலக சேம்பியன் பட்டத்தை அடுத்த 2 வருடங்களுக்கு தக்க
வைத்துக் கொண்டதற்குப் பிறகு எழுதுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 42
வயதில் ஆனந்த் பெற்ற இந்த இமாலய வெற்றிக்கு, அவருக்கு செஸ் மேல் எள்ளளவும்
ஆர்வம் குறையாமல் இருப்பதே முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை.
செஸ்ஸில் தொடக்க ஆட்ட ஆராய்ச்சியையும், கற்றலையும் செஸ் விளையாட்டின் மீது
ஒரு வித காதலோடு அவர் செய்ததும், தொடர்ந்து செய்து வருவதுமே, அவர் பல
சிகரங்களைத் தொட பெரிதும் உதவின. அதோடு, கடினமான தருணங்களில் ஒரு
சேம்பியனுக்கே உரித்தான மன உறுதியும், தளரா நரம்புகளும் அவருக்கு
பெரும்பலமாக அமைந்து வந்திருக்கின்றன. ஒரு மோசமான தோல்விக்குப் பின் 8வது
ஆட்டத்தில், 17-ஏ நகர்த்தல்களில் கெல்ஃபாண்டை அவர் வீழ்த்தியது இதற்கு
சிறந்த உதாரணம். கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டிடம் இத்தகைய குணங்களை
காண முடியும்.
இதில், டெக்னிக்கலாக
அதிகம் எழுதப் போவதில்லை. அவரது செஸ் வாழ்க்கையின் அருமை பெருமைகள் பற்றி
கொஞ்சம் பேசுவோம். 12 பிரதம ஆட்டங்களில், புள்ளிகள் சமனாக இருந்த நிலையில்
நேற்று நடந்து முடிந்த 4 ஆட்டங்கள் கொண்ட துரித ஆட்டத் தொடரை ஆனந்த்
2.5-1.5 என்ற புள்ளி எண்ணிக்கையில் வென்றார். திருமணத்திற்குப் பின் பல
ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மகன் பிறந்ததால் அடைந்த மகிழ்ச்சிக்கு இணையான
ஒன்றை இந்த ஐந்தாவது செஸ் உலகப் பட்டம் ஆனந்துக்கு அளித்திருக்கும்
என்பதில் சந்தேகமே இல்லை.
2வது ஆட்டத்தில் வென்று, மற்ற 3
ஆட்டங்களையும் சுலபமாக டிரா செய்தார் ஆனந்த். இந்த நான்கு 20 நிமிட
ஆட்டங்களிலும், கெல்ஃபாண்ட் நேரக்குறைவினால் ரொம்ப சிரமப்பட்டார். துரித
ஆட்டத்தில் முடிசூடா மன்னராக விளங்கும் ஆனந்துக்கு அந்தப் பிரச்சினையே
இல்லை. 2வது ஆட்டத்தில், நேரக் குறைவு தந்த அழுத்தத்தினால், சில
சந்தேகத்துக்குரிய தேர்வுகள் செய்யும் கட்டாயத்துக்கு கெல்ஃபாண்ட் ஆளானார்.
ஆனாலும், ஒரு மகாபாரதப் போராட்டத்துக்குப் பின் தான், தனது பிஷப்பை ஒரு
ஃபோர்க்கில் குதிரைக்கு ஈடாக இழந்த பின், வேறு வழியின்றி 77வது நகர்த்தலில்
கெல்ஃபாண்ட் ரிசைன் செய்தார்.
http://www.dnaindia.com/sport/commentary_as-it-happened-wcc-2012-anand-takes-lead-in-tie-break-2_1695793
அது
போலவே, நேரக் குறைவு தந்த அழுத்தத்தினாலேயே, 3வது ஆட்டத்தில்
முன்னணியில்இருந்தும், கெல்ஃபாண்டால் அதை வெற்றியாக மாற்ற இயலவில்லை அல்லது
நமது ஸ்பீட் கிங் அதை அனுமதிக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். 3வது
மற்றும் 4வது ஆட்டங்களில் ஆனந்தின் (நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளாத)
சுறுசுறுப்பான தற்காப்பு நகர்த்தல்கள் அபாரம் என்று கூறுவேன்.
Speaking
about the tie break, the champion said, "I wouldn’t say there is some
kind of justice in it. After we played 12-games, I dont think the
tiebreak is a reasonable situation that would separate us after a very
tough match. Things really went my way in the tiebreaker, I can say I
won because I won", Anand said matter-of-factly. ஆனந்த் இப்படிக்
கூறியிருப்பது அவரது தன்னடகத்தையும், யதார்த்த அணுகுமுறையையும்
காட்டுகிறது.
செஸ் வரலாற்றில், மூன்று வகையான ஆட்ட முறைகளில் (நாக்
அவுட், மேட்ச், டோர்னமண்ட்) உலக சேம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஒருவர் விஷி
ஆனந்த் மட்டுமே. நாக் அவுட் முறையில், டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போல,
ஒவ்வொரு சுற்றிலும், தோற்றவர் வெளியேற்றப்படுவார். கால் இறுதி, அரை இறுதி,
இறுதிச் சுற்றுகள் நடந்து வெற்றி பெற்றவர் சேம்பியன் என
அறிவிக்கப்படுவார். 2000-ஆம் ஆண்டு, அலெக்ஸி ஷிராவை நாக் அவுட் முறையில்,
இறுதிச்சுற்றில் வென்று முதன் முதலாக உலக சேம்பியன் ஆனார்.
6 ஆட்டங்கள் இருந்தும், ஆனந்துக்கு நான்கே ஆட்டங்கள் தான் தேவைப்பட்டன. 3.5-0.5
2007-இல்
கிராம்னிக் உலக சேம்பியனாக இருந்தபோது மெக்ஸிகோவில் நடந்த (உலகின்
அப்போதைய 8 சிறந்த ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட)
டோர்னமண்ட் முறை உலக செஸ் சேம்பியன்ஷிப்பில், 9 புள்ளிகள் எடுத்து
முதலாவதாக வந்ததன் மூலம் ஆனந்த் 2வது முறை உலக சேம்பியன் ஆனார். இதில்,
ஒரு தோல்வியைக் கூட ஆனந்த் சந்திக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
http://en.wikipedia.org/wiki/World_Chess_Championship_2007
அடுத்த
ஆண்டில், மேட்ச் ஆட்ட முறையில், கிராம்னிக்கை 6.5-4.5 என்ற புள்ளி
கணக்கில் தோற்கடித்து (3வது) பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
2010-இல்,
டோபோலோவ் என்ற சிங்கத்தை அதன் குகையிலேயே (சோஃபியா, பல்கேரியா) வீழ்த்தி
பட்டத்தை 4வது முறை வென்றது, ஆனந்தின் செஸ் வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய
சாதனை. கிராம்னிக் போல் அல்லாமல், டோபோலோவ், ரிஸ்க் எடுத்து
அக்ரெஸ்ஸிவ்வாக விளையாடுபவர். புள்ளிகள் சமனாக (5.5-5.5) இருந்த நிலையில்,
12வது இறுதி ஆட்டத்தில் கறுப்புக் காய்களுடன் ஆடிய ஆனந்த், டோபோலோவுக்கு
கொடுத்த சைக்காலாஜிகல் அடி காரணமாக, இப்போது உலகத் தர வரிசையில் 12வது
இடத்தில் டோபோலோவ் இருக்கிறார். இந்த 12வது ஆட்டமும், ஆனந்தின்
வெற்றியின் நேர்த்தியும் மிகவும் பேசப்பட்டவை.
இந்தியாவின் முதல்
உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி
கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம்,
மொத்தப் புள்ளிகள் என்ற 3 வகைகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ்
டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல
முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு,
இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை
வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே
ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே.
ஆனந்த் செஸ் ஆஸ்கார் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார்.
இந்தியாவின்
இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில்,
ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த்
ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.
எ.அ.பாலா
இது இட்லிவடை வலிப்பதிவுக்காக எழுதியது. இதை வைத்து பரிசுப்போட்டி எல்லாம் இ.வ அறிவித்திருந்தது என் வலையுலக வாழ்க்கையின் ஹைலைட் ;-) மற்ற விவரங்கள் இ.வ வலைப்பதிவில் காணலாம்.

இட்லிவடை
வாசகர்களில் செஸ் ஆர்வலர்களுக்கு மட்டுமாவது, இந்த ஐபிஎல் கிரிக்கெட்
பெருவிழாவுக்கு நடுவே, தற்சமயம் உலக செஸ் சேம்பியன்ஷிப் நடந்து வருவது
நிச்சயம் தெரிந்திருக்கும். 10 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், உலக
சேம்பியன் விஷி ஆனந்தும், அவரை எதிர்த்தாடும் போரிஸ் கெல்ஃபாண்டும்
சமநிலையில் (5-5) இருக்கிறார்கள். 12 ஆட்டங்கள் முடிவில், புள்ளிகள்
சமநிலையில் இருக்குமானால், 4 துரித ஆட்டங்கள் நடைபெறும். அதில் சமன் எனில்,
2 அதிவேக ஆட்டங்கள், சமன் எனில், இது போல 4 முறை (4 X 2) தொடரும், சமன்
எனில், போதும் விட்டு விடுவோம் :-) இப்போது 7,8,9,10-வது ஆட்டங்கள் பற்றி
பார்க்கலாமா?
எ.அ.பாலாவின் ஐபிஎல் கிரிக்கெட்
இடுகைகளுக்கு இடையே, நான் செஸ் குறித்து டெக்னிக்கலாக எழுதினால் எடுபடுமா
என்று ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால், 2010 உலக சேம்பியஷிப் சமயத்தில்,
லலிதா ராம் அவர்களின் செஸ் இடுகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததை
கவனித்தேன்! அந்த காரணத்தால் ஒரு கட்டுரை எழுதிப்பார்ப்போமே என்றொரு
உந்துதல் பிறந்தது.முதல் 6 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. அதில் 3வது
Neo-Grulfeld ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் விளையாடிய ஆனந்துக்கு வெற்றி
வாய்ப்பு இருந்தது. 30 நகர்த்தல்கள் வரை முன்னணியில் தான் இருந்தார்;
d6-ல் அவரது ஒரு passed pawn முடிவாட்டத்தில் கெல்ஃபாண்டுக்கு பிரச்சினை
தரும் வகையில் அமர்ந்திருந்தது. நேரமின்மை காரணமாக ஆனந்தின் பலமில்லாத
35வது நகர்த்தலால் (Rh1), ஆனந்திடம் ஒரு pawn அதிகமிருந்தும், ஆட்டம்
டிராவில் முடிந்தது. ஆட்டத்தை இங்கே ஆடிப் பார்க்கலாம்!
http://www.chessgames.com/perl/chessgame?gid=1665818
7வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1666550
இதில்
ஆனந்துக்கு கறுப்புக்காய்கள். செமி-ஸ்லாவ் தற்காப்பை ஆனந்த் கையாண்டார்.
11-வது நகர்த்தலின் முடிவில், கெல்ஃபாண்ட் C-file-ஐ தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றது போலத்
தோன்றியது. ஆனந்தின் 15வது நகர்த்தல் (Qb8), கெல்ஃபாண்டின் C-file
ஆதிக்கத்தை கலைக்க மேற்கொண்ட முடிவு என்பது அடுத்து கருப்பு யானை C8க்கு
வந்தவுடன் புரிந்தது. 20 நகர்த்தல்களுக்குப் பின், வெள்ளைக் காய்கள்
தாக்குதலை தொடங்க சாதகமாகவே பொஸிஷன் இருந்தது. ஆனந்தின் காய்கள் ராணியின்
தரப்பு (Queenside) குவிந்திருந்த போதிலும், இதுவரை அவர் செய்த தற்காப்பு
நகர்த்தல்களை பலமற்றவை என்று கூறமுடியாது.
ஆனந்தின் 21வது நகர்த்தல்
Ne4 பலகீனமானது என்று சொல்ல செஸ் கிராண்ட் மாஸ்டர் தேவையில்லை. அவரது
வீழ்ச்சிக்கு அடி கோலிய நகர்த்தலது! உடனே, கெல்ஃபாண்ட் தனது யானையையும்,
ராணியையும் ஆனந்துடன் எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டதில் அவரது பொஸிஷன் மேலும்
வலுவடைந்தது. தொடர்ந்து பலகீனமான சந்தேகத்துக்குரிய நகர்த்தல்களால், தனது
பொஸிஷனை மேலும் மோசமாக்கிக் கொண்ட ஆனந்த் ஒரு உலக சேம்பியன் போல
விளையாடவில்லை என்பது வருத்தமாக விஷயம். C8-ல் இருந்த ஆனந்தின் வெள்ளை
பிஷப், தனக்கும் ஆட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல பரிதாபமாக
காட்சியளித்தது. கெல்ஃபாண்ட் கொடுத்த தொடர் அழுத்தத்தினால், அந்த பிஷப்பை
35வது நகர்த்தலில் ஆனந்த் இழந்தார்.
கெல்ஃபாண்ட் தனது யானை, 2
குதிரைகளைக் கொண்டு ஆனந்தின் ராஜாவுக்கு மேட்டிங் வலையை அழகாக விரித்தார்.
கடைசி முயற்சியாக, e- pawn-ஐ ராணியாக்க ஆனந்த் வகுத்த அதிரடி
திட்டத்திற்கு கெல்ஃபாண்ட் அசரவில்லை. 38வது நகர்த்தலில், ஆனந்த் “38. ...
e1=Q 39. Ng6+ Kg8 40. Rg7#!” காரணத்தினால் ரிசைன் செய்தார்.
8வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1666558
உலக
சேம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மோசமாக விளையாடி தோற்கும்போது
உண்டாகும் சைக்காலிஜிகல் அழுத்தம் காரணமாக, அடுத்த ஆட்டத்தில் பாதுகாப்பான
ஆட்டத்தை தேர்வு செய்யும் மனநிலைக்கு ஒருவர் ஆளாவது சகஜமே. ஆனால், ஆனந்தின்
முந்தைய பல உலக சேம்பியன்ஷிப் அனுபவமும், அவரது அசாத்திய tactical
ஆட்டத்திறமையும் இந்த முக்கியமான ஆட்டத்தில் அவருக்கு பெரிதும் உதவின.
ஆனந்துக்கு
வெள்ளைக்காய்கள். இதுவும் ஒரு d4 தொடக்கம், நியோ கிரன்ஃபல்ட் தற்காப்பு
வகையில், ஆனந்த் சற்றே அக்ரஸிவ்வான f3 நகர்த்தல் வாயிலாக ஃப்ளோர்-ஆலிகைன்
தொடர்ச்சியைத் தேர்ந்தெடுத்தார். இவ்வாட்டத்தில் வெற்றி அவசியம் என்பதால்,
ஆனந்த் ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 7வது நகர்த்தலில்
ஆனந்தின் ராஜா தரப்பு குதிரை (ராணி தரப்பு குதிரை நேரடியாக செல்லும்
வாய்ப்பிருந்த) c3-க்கு சென்றது சற்று ஆச்சரித்தை அளித்தது.
கெல்ஃபாண்ட்
ராஜா தரப்பு castling செய்தார். ஆனந்தின் 12வது நகர்த்தல் g4-ஐ
பார்த்தவுடன், ஆனந்த் தாக்குதலுக்காக castling-ஐ புறக்கணித்து விட்டது
புரிந்தது. 14வது நகர்த்தலில், கெல்ஃபாண்ட் தனது குதிரையை g7 அல்லது f6க்கு
எடுத்துச் சென்று அமைதியாக ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம். ஆனால் அவர்
பொஸிஷன் (14...Nf6 15.Kc2 Na6 16.Rd1 or 14...Ng7 15.h4) மேலும் பலமிழந்து
போயிருக்கும்,
தானும் தாக்குதலில் இறங்க முடிவு செய்த கெல்ஃபாண்ட்,
ஆனந்தின் ராஜாவுக்கு செக் கொடுத்து, f3 ஃபோர்க் வாயிலாக அவரது யானையை
வெட்டும் நோக்கத்துடன் 14.Qf6 நகர்த்தலை தேர்ந்தெடுத்தார். ஆனால், உலக
சேம்பியன்ஷிப் ஆட்டத்தில், Attack is the best form of defense என்பது சில
சமயங்களில் மட்டுமே கை கொடுக்கும். ஆனந்த் இதை துல்லியமாக எதிர்பார்த்தவர்
போல, 15.gxNh5 நகர்த்தலை அதிகம் யோசிக்காமல் செய்தார். 15.... Qxf3+
16.Kc2 Qxh1 தொடர்ந்தன. ஆனந்த் தனது யானையை மனமுவந்து தாரை வார்த்தார்
என்று தான் கூற வேண்டும். ஏன்?
ஆனந்தின் 17. Qf2-க்கு பிறகு தான்
தனது ராணி ஆனந்த் விரித்த trap வலையில் மாட்டி விட்டது கெல்ஃபாண்டுக்கு
உறைத்தது. கெல்ஃபாண்ட் 17 ... Nc6 ஆடி மேலும் ஒரு குதிரையை இழந்து ராணியை
காப்பாற்றி, மோசமான பொஸிஷனில் ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம். ஆனந்த் போன்ற
ஒரு விற்பன்னரிடம் அதில் பயனெதுவும் இல்லை என்றுணர்ந்து உடனடியாக ரிசைன்
செய்தார். கெல்ஃபாண்டின் பிளண்டர் காரணமாகத் தான் அவர் தோற்றார்
என்றாலும், இவ்வாட்டத்தில் ஆனந்தின் ஒவ்வொரு நகர்த்தலும், துல்லியமான,
நம்பிக்கையான நகர்த்தல். சமீப காலத்தில் உலக சேம்பியன்ஷிப் ஆட்டங்களில்
மிகக் குறைந்த நகர்த்தல்களில் முடிவடைந்த ஆட்டம் இது என்று கூறுகிறார்கள்.
9வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1667306
இவ்வாட்டம்
டிராவில் தான் முடிந்தது என்றாலும், கெல்ஃபாண்டின் தாக்குதலை தனது
தற்காப்பு நகர்த்தல்களால் திறமையாக சமாளித்த ஆனந்தை நிச்சயம் பாராட்ட
வேண்டும். அதுவும், பல நகர்த்தல்களுக்கு முன்பே, ஆட்டம் செல்லக்கூடிய
சாத்தியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, தனது ராணியை 20. Rxc5 நகர்த்தலுக்குப்
பின் கெல்ஃபாண்டின் யானை, பிஷப்புக்கு தியாகம் செய்யத் துணிந்ததில், அவரது
மன உறுதி பளிச்சிட்டது.
முடிவாட்டத்தில், கெல்ஃபாண்டின் ராணிக்கு
எதிராக ஆனந்திடம் ஒரு யானையும், ஒரு குதிரையும் இருந்தன. இம்மாதிரி
சூழ்நிலையில், Zugzwang ஏற்படாத வகையில் ஆடுவதற்கு அதிக திறமை வேண்டும்.
கெல்ஃபாண்ட் வெற்றி பெற மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் ஆனந்த்
முறியடித்ததில், ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிவடைந்தது.
10வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1667320
இவ்வாட்டத்தில்
ஆனந்துக்கு வெள்ளை என்பதால், ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சற்றே
வித்தியாசமான king pawn (e4) தொடக்கம்; சிசேலியன் தற்காப்பு (ரோஸலிமோ
தொடர்ச்சி) வகைப்பட்டது. 5வது நகர்த்தலில் (e5) கெல்ஃபாண்ட் தனது pawn ஐ
தியாகம் செய்ய முடிவு செய்தார். அவர் d6 ஆடியிருந்தால், அவரது கருப்பு ராணி
trap செய்யப்படும் அபாயம் ஒன்று ஒளிந்திருந்தது !!! ...5...d6 6.e5
6...dxe5 7.Nxe5 Qd4 8.Nc4 Qxa1 9.Nc3.
pawn-களின் அரண் இல்லாத
ராணியின் தரப்பு தைரியமாக castling செய்து கெல்ஃபாண்ட்
ஆச்சரியப்படுத்தினார், இந்த சூழலில், ஆனந்த் மிகச் சிறிய அளவில்
முன்னணியில் இருந்தார் என்று தான் கூற வேண்டும், ஆனந்தின் c5 pawn மீதான
தாக்குதலை கெல்ஃபாண்ட் சமாளித்தது அருமை. 8வது ஆட்டத்தின் தோல்வியை மனதில்
வைத்து, கெல்ஃபாண்ட் இவ்வாட்டத்தில் மிகச் சரியான தற்காப்பு நகர்த்தல்களை
ஆச்சரியமளிக்கும் வகையில் மேற்கொண்டார். 25வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில்
முடிந்தது.
ஆனந்த்
18வது நகர்த்தலில் Re5 ஆடியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.
தொடர்ச்சியாக ஆட்டம் சிக்கலான பொஸிஷனுக்கு போயிருக்கும் என்பது தவிர,
ஆனந்துக்கு நிச்சயமான பெரிய அட்வாண்டேஜ் கிடைத்திருக்கும் என்று ஆராய்ந்து
கூறுவது என் செஸ் அறிவுக்கு அப்பாறப்ட்டது. ஆனாலும், இன்னும் இரண்டே
ஆட்டங்கள் இருக்கும் நிலையில், இந்த டிரா எனக்கு வருத்தத்தையே அளித்தது.
எ,அ.பாலா